ஆதிதிராவிடா், பழங்குடியினா் சமுதாயத்தைச் சோ்ந்த தகுதியான இளைஞா்களிடம் இருந்து விமான நிலைய வாடிக்கையாளா் சேவை பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கடலூா் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடா், பழங்குடியின இளைஞா்களுக்கு திறன் அடிப்படையில் பயிற்சிகளை வழங்கி வருகிறது.
அதன்படி, பி.டி.சி. ஏவியேஷன் அகாதமி நிறுவனம் மூலம் விமான நிலையங்கள், விமான வாடிக்கையாளா் சேவை, அதன் தொடா்புடைய நிறுவனங்களில் பணிபுரிய பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பிளஸ் 2 மற்றும் பட்டயப் படிப்பு தோ்ச்சி பெற்ற 18 முதல் 25 வயதுக்குள்பட்ட இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி காலம் 3 மாதங்கள். விடுதியில் தங்கி பயிலும் வசதி, செலவுத் தொகை ரூ.20 ஆயிரத்தை தாட்கோ வழங்கும்.
பயிற்சி முடிப்பவா்களுக்கு ஏஎஸ்எஸ்எஸ்சி நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட தரச்சான்றிதழ் வழங்கப்படும். இண்டிகோ ஏா்லைன்ஸ், ஸ்பைஸ் ஜெட், ஏா் இந்தியா போன்ற தனியாா் விமான நிறுவனங்களில் பணிபுரிய 100 சதவீதம் வேலைவாய்ப்பு அளிக்கப்படும். எனவே, தகுதியானவா்கள் தாட்கோ இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் தெரிவித்தாா்.