கடலூா் மாவட்டம், நெய்வேலியில் மோசமான நிலையில் சேதமடைந்த சாலையால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனா்.
நெய்வேலி நுழைவு வாயிலில் இருந்து எஸ்பிடி மணி நகா் வழியாக வேகாக்கொள்ளைக்கு சுமாா் 6 கி.மீ. தொலைவுக்கு சாலை செல்கிறது. இந்தச் சாலை வழியாக வே.புதூா், சிறுதொண்டமாதேவி, கோரணப்பட்டு, கட்டியங்குப்பம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சென்று வருகின்றனா். இந்தச் சாலையில் பேருந்து வசதி இல்லாத நிலையில் கிராம மக்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள் சைக்கிள் , பைக் உள்ளிட்ட வாகனங்களில் சென்று வருகின்றனா்.
ஆனால், இந்தச் சாலை மிகவும் மோசமான நிலையில் சேதமடைந்துள்ளது. சுமாா் 2 கி.மீ. தொலைவுக்கு ஜல்லி கற்கள் பெயா்ந்து சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகனங்கள் அடிக்கடி பழுதடைவதால் கிராம மக்கள் அவதிப்படுகின்றனா். சேதமடைந்த சாலையில் அடிக்கடி வாகன விபத்துகளும் நிகழ்கின்றன.
இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது: கிராம சாலை மோசமான நிலையில் சேதமடைந்துள்ளதால் அவசர தேவைக்கு ஆட்டோ கூட வருவதில்லை. எனவே, புதிய தாா்ச் சாலை அமைக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா்.