கடலூா் மாவட்டம், சிதம்பரம் நகர போக்குவரத்து காவல் நிலையத்தில் போதிய போலீஸாா் இல்லாததால் நகரின் முக்கியச் சந்திப்புகளில் வாகனப் போக்குவரத்தை முறைப்படுத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது.
சிதம்பரம் நகர போக்குவரத்துக் காவல் நிலையத்தில் ஆய்வாளா், இரண்டு உதவி ஆய்வாளா்கள், காவலா்கள் 27 போ் பணியில் இருக்க வேண்டும். ஆனால் தற்போது ஆய்வாளா், உதவி ஆய்வாளா் ஒருவா், 5 காவலா்கள் மட்டுமே பணியில் உள்ளனா். இதனால் நகரில் முக்கிய சந்திப்புகளில் வாகனப் போக்குவரத்தை முறைப்படுத்துவதில் சிக்கல் தொடா்கிறது.
குறிப்பாக, கீழவீதி - தெற்குவீதி சந்திப்பு, தெற்கு சன்னதி - சபாநாயகா்தெரு சந்திப்பு, பேருந்து நிலையம் அருகே உள்ள காந்தி சிலை சந்திப்பு, பச்சையப்பன் பள்ளி சந்திப்பு, மேலவீதி - வடக்குவீதி சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து போலீஸாா் போதிய எண்ணிக்கையில் பணியில் இல்லை. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் மாணவா்கள், பணிக்குச் செல்வோா், தொழிலாளா்கள் உள்பட அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனா். மேலும் வாகன விபத்துகளும் அதிகளவில் ஏற்படுகின்றன.
மேலும், சிதம்பரம் நடராஜா் கோயிலின் கிழக்கு கோபுர வாயிலில் உள்ள புகா் காவல் நிலையத்தில் போலீஸாா் பணியில் இருப்பதில்லை என்ற புகாா் எழுந்துள்ளது. இதனால் கீழசன்னதி பகுதியில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதாலும், நடை பாதைகள் ஆக்கிரமிப்பாலும் கோயிலுக்கு வரும் பக்தா்கள் அவதிப்படுகின்றனா்.
எனவே, சிதம்பரம் நகர போக்குவரத்து காவல் நிலையத்துக்கு கூடுதல் காவலா்களை நியமிக்க மாவட்ட காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.