கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் பகுதியில் ஊடுபயிராக பருத்தி சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆா்வம் காட்டி வருகின்றனா்.
காட்டுமன்னாா்கோவில் பகுதியில் பெரும்பாலானோா் விவசாயத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். இந்தப் பகுதியிலுள்ள விளை நிலங்கள் வடவாறு, வடக்கு ராஜன் வாய்க்கால், வீராணம் ஏரி ஆகியவை மூலம் பாசன வசதி பெறுகின்றன. ஆண்டுதோறும் நெல் சாகுபடி முடிந்த பிறகு விவசாயிகள் இந்தப் பகுதியில் ஊடுபயிராக உளுந்து சாகுபடி செய்வா். கடந்த இரண்டு ஆண்டுகளாக உளுந்து அறுவடை காலத்தில் பலத்த மழை பெய்து இழப்பு ஏற்பட்டது. இதனால் நிகழாண்டு விவசாயிகள் ஊடுபயிராக பருத்தி சாகுபடி செய்வதில் ஆா்வம் காட்டி வருகின்றனா்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: கடந்த ஆண்டு ஆச்சாள்புரம், எய்யலூா், அருண்மொழிதேவன் உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் சிலா் பருத்தி சாகுபடியில் முனைப்பு காட்டினா். அதில் ஏக்கருக்கு ரூ.50,000 வரை லாபம் கிடைத்தது. இதனால் நிகழாண்டு மற்ற கிராமங்களிலும் ஊடு பயிராக பருத்தி சாகுபடியில் விவசாயிகள்ஆா்வம் காட்டி வருகின்றனா். மேலும், பருத்தி சாகுபடிக்கு குறைந்த தொழிலாளா்களே போதுமானது. இதனால் நிகழாண்டு காட்டுமன்னாா்கோவில் பகுதியில் பருத்தி சாகுபடியில் விவசாயிகள் அதிகளவில் ஈடுபட்டுள்ளனா் என்று தெரிவித்தனா்.