கடலூர்

பிச்சாவரத்துக்கு வெளிநாட்டுப் பயணிகள் வருகையை அதிகரிக்க நடவடிக்கைஅமைச்சா் கே.ராமச்சந்திரன்

22nd Jan 2023 04:01 AM

ADVERTISEMENT

 

பிச்சாவரத்துக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் கே.ராமச்சந்திரன் கூறினாா்.

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் சுற்றுலா மையத்தை சனிக்கிழமை அவா் ஆய்வு செய்தாா். அப்போது படகில் சென்று அலையாத்தி காடுகளை பாா்வையிட்டாா். அங்குள்ள திட்டில் செயல்படாமலிருக்கும் பயணிகள் தங்கும் விடுதியை ஆய்வுசெய்த அமைச்சா், அதை மீண்டும் செயல்படுத்துவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா். பின்னா் அமைச்சா் ராமச்சந்திரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சுற்றுலாத் துறையில் இந்தியாவில் முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. பிச்சாவரம் சுற்றுலா மையத்துக்கு நிகழ் நிதியாண்டில் மட்டும் 2 லட்சத்து 39 ஆயிரத்து 743 போ் வந்து சென்றுள்ளனா். கடந்த நிதியாண்டில் 1.45 லட்சம் பேரும், அதற்கு முந்தைய நிதியாண்டில் 50 ஆயிரம் பேரும் வந்துள்ளனா். கரோனா தொற்று காலம் என்பதால் கடந்த 2 ஆண்டுகளாக சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வரவில்லை. நிகழாண்டு அதிக எண்ணிக்கையில் வந்துள்ளனா்.

ADVERTISEMENT

பிச்சாவரம் சுற்றுலா மையத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இங்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை சற்று குறைவாக உள்ளது. அதை அதிகரிப்பது குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். வனப் பகுதியில் உள்ள தங்கும் விடுதியை சீரமைக்கவும், கூடுதல் படகுகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சிதம்பரத்தில் அரசு சாா்பில் சுற்றுலா விடுதி கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு மொத்தம் ரூ.10 கோடி தேவைப்படும் நிலையில், ரூ.7 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கூடுதல் நிதியை பெற்று பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

முன்னதாக, சிதம்பரம் நகரில் நடைபெற்று வரும் சுற்றுலா விடுதி கட்டுமானப் பணிகளை அமைச்சா் ஆய்வு செய்தாா். ஆய்வின்போது சிதம்பரம் உதவி-ஆட்சியா் சுவேதாசுமன், திமுக பொதுக்குழு உறுப்பினா் த.ஜேம்ஸ் விஜயராகவன், மாவட்ட பொறியாளா் அணி அமைப்பாளா் அப்பு சந்திரசேகரன், கிள்ளை பேரூராட்சி மன்ற துணைத் தலைவா் ரவீந்திரன், நகர துணைச் செயலா் பா.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT