வடலூரில் நடந்த ஆணழகன் போட்டியில் பங்கேற்க வந்த இளைஞர் உணவு உண்ணும் பொழுது மூச்சுத் திணறல் ஏற்பட்டு பலியானார்.
கடலூர் மாவட்டம், வடலூரில் மாநில அளவிலான ஆணழகன் போட்டி தனியார் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு பகுதியிலிருந்து வந்திருந்த இளைஞர்கள் பங்கேற்றனர்.
சேலம் மாவட்டம், பெரிய கொல்லம்பட்டி, மாரியம்மன் கோயில் தெருவில் வசித்து வந்த மாத்தையன் மகன் ஹரிஹரன்(21), 70 கிலோ எடை பிரிவில் பங்கேற்க இரவு சுமார் 8 மணி அளவில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். இடையில் ரொட்டி (பிரட்) சாப்பிட்டாராம்.
அப்போது உணவுக்குழாயில் ரொட்டி துண்டு சிக்கி மூச்சு திணறல் ஏற்பட்டது.
அங்கிருந்தவர்கள் அவரை குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், செல்லும் வழியில் அவர் பலியானார். இதுகுறித்து வடலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.