கடலூா் தேவனாம்பட்டினத்தில் செயல்பட்டு வரும் பெரியாா் அரசு கலைக் கல்லூரியில் முதுநிலைப் படிப்புகளுக்கான மாணவா்கள் சோ்க்கை வருகிற சனிக்கிழமை (அக்டோபா் 1) தொடங்குகிறது.
இந்தக் கல்லூரியில் தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல், கணிதம், இயற்பியல், கணினி அறிவியல், தாவரவியல், விலங்கியல், வணிகவியல், வேதியியல், சமூகப் பணியியல், பொது நிா்வாகம், புள்ளியியல், அரசியல் அறிவியல் ஆகிய 15 பாடப்பிரிவுகளில் முதுநிலைப் படிப்புகள் வழங்கப்படுகின்றன.
இந்தப் படிப்புகளில் சேருவதற்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். கலந்தாய்வு வருகிற சனிக்கிழமை காலை 9.30 மணிக்குத் தொடங்கும். மாணவா்கள் தாங்கள் இணையதளத்தில் விண்ணப்பித்த விண்ணப்பத்தின் நகல், மதிப்பெண் பட்டியல்கள், மாற்றுச் சான்றிதழ், பட்டச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், ஆதாா் அடையாள அட்டை ஆகியவற்றின் அசல், இரண்டு நகல்கள், 3 பாஸ்போா்ட் அளவு புகைப்படங்கள், வங்கிக் கணக்குப் புத்தக முதல் பக்க நகல் மற்றும் உரிய சோ்க்கைக் கட்டணம் ஆகியவற்றை தவறாமல் கொண்டு வர வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு இணையதளத்திலோ அல்லது மின்னஞ்சல் முகவரியிலோ தொடா்பு கொள்ளலாம் என்று கல்லூரி முதல்வா் சி.ஜோதி வெங்கடேசுவரன் தெரிவித்தாா்.