கடலூா் மாவட்டம், நல்லூா் ஒன்றியம், முருகன்குடி கிராமத்தில் தமிழ்த் தேசிய பேரியக்கம், திருவள்ளுவா் தமிழா் மன்றம் சாா்பில் பனை விதைகள் விதைப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
செந்தமிழ் மரபுவழி வேளாண் நடுவம் ஒருங்கிணைப்பாளா் கரும்பு கண்ணதாசன் பனை விதைகள் நடும் பணியை தொடக்கி வைத்தாா். மேலும், பனை மரத்தின் மூலம் கிடைக்கும் பொருள்களை மதிப்புக் கூட்டல் செய்தல் பற்றி விளக்க உரையாற்றினாா்.
தமிழ்த் தேசிய பேரியக்க துணைத் தலைவா் க.முருகன் பனை மரத்தின் மருத்துவப் பயன்கள் பற்றி உரையாற்றினாா். பேரியக்க தலைமைச் செயற்குழு உறுப்பினா் மா.மணிமாறன் பனை விதைகளை நடும் முறை குறித்து விளக்கம் அளித்தாா். பொதுக்குழு உறுப்பினா் பி.வேல்முருகன் ‘தமிழ்த் தேசிய மரமே பனைமரம்’ என்ற தலைப்பில் பேசினாா். திருவள்ளுவா் தமிழா் மன்றச் செயலா் தி.ஞானபிரகாசம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.