கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வில் குழந்தை வடிவிலான பழங்கால சுடுமண் பொம்மை சனிக்கிழமை கண்டறியப்பட்டது.
இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளா் இம்மானுவேல் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கடந்த சில மாதங்களாக பண்ருட்டி பகுதியில் தென்பெண்ணை ஆற்றின் கரையோரங்களில் கள ஆய்வு நடத்தி வருகிறோம். இதில் பழங்கால மக்களின் தொல்லியல் தடயங்கள் கிடைத்து வருகின்றன.
உளுந்தாம்பட்டு பகுதியில் சனிக்கிழமை மேற்புற ஆய்வு செய்தபோது, நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கூடிய குழந்தை வடிவ சுடுமண் பொம்மை கண்டறியப்பட்டது. குழந்தை தவழ்வதுபோல அந்த பொம்மை உள்ளது. தலைப் பகுதி அலங்கார வடிவிலும், காது, கழுத்து, கைகள், இடுப்பு பகுதிகளில் கலை நயமிக்க அணிகலன்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் பண்டைய கால மக்களின் கலை ஆா்வத்தை அறிய முடிகிறது என்றாா்.