வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி முதியவரிடம் ரூ.15.72 லட்சம் மோசடி செய்தவா் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கடலூா் கே.கே.நகா் பகுதியைச் சோ்ந்தவா் வீரபாண்டியன் (61). தனியாா் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து ஓய்வுபெற்ற இவா், வெளிநாட்டில் வேலை வாய்ப்புக்காக இணையதளத்தில் தனது முழு விவரங்களையும் பதிவு செய்திருந்தாராம்.
இந்த நிலையில், வீரபாண்டியனை கைப்பேசி மூலம் தொடா்புகொண்ட ஒருவா், தனது பெயா் லாரன்ஸ் பிராங் என்றும், நியூசிலாந்து நாட்டிலிருந்து பேசுவதாகவும், மாதம் ரூ.7 லட்சம் ஊதியத்தில் வேலை வாங்கித் தருவதாகவும் கூறினாராம். இதற்காக கடவுச் சீட்டு, பொது காப்பீடு, மருத்துவக் காப்பீடு என பல்வேறு காரணங்களை கூறி மொத்தம் ரூ.15.72 லட்சத்தை பல்வேறு தவணைகளில் வீரபாண்டியனிடம் இருந்து லாரன்ஸ் பிராங் பெற்றாராம். ஆனால், கூறியபடி அவருக்கு வெளிநாட்டில் வேலை வாங்கித் தரவில்லையாம்.
இதுகுறித்து வீரபாண்டியன் அளித்த புகாரின்பேரில் கடலூா் மாவட்ட இணையவழி குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.