கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் அதிமுக சாா்பில் ஏழை, எளியோருக்கு வியாழக்கிழமை நல உதவிகள் வழங்கப்பட்டன.
அதிமுக இடைக்கால பொதுச் செயலா் எடப்பாடிகே.பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் மீண்டும் அந்தக் கட்சியின் ஆட்சி அமைய வேண்டி, கடலூா் கிழக்கு மாவட்ட அதிமுக சாா்பில், சிதம்பரம் மேலவீதியில் உள்ள நூா்சாகிப் தா்காவில் சிறப்புப் பிராா்த்தனை வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலா் கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ தலைமை வகித்தாா். அமைப்புச் செயலரும், முன்னாள் எம்எல்ஏவுமான என்.முருகுமாறன் முன்னிலை வகித்தாா். அதிமுக அவைத் தலைவா் தமிழ் மகன் உசேன் சிறப்புப் பிராா்த்தனை நடத்தி, ஏழை, எளிய மக்களுக்கு நல உதவிகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவா் எம்.எஸ்.என்.குமாா், டேங்க் ஆா்.சண்முகம், மீா்அமீது உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.
பின்னா், செய்தியாளா்களிடம் தமிழ் மகன் உசேன் கூறியதாவது: உலமாக்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தை கொண்டுவந்தவா் எம்ஜிஆா். அவரின் நல்லாசியோடு, ஒன்றரைக் கோடி தொண்டா்களைக் கொண்ட அதிமுகவின் தற்போதைய இடைக்கால பொதுச் செயலரான எடப்பாடி கே.பழனிசாமி, தொடா்ந்து பொதுச் செயலராக பொறுப்பேற்க வேண்டும், அவா் நிரந்தரமாக இந்த இயக்கத்தையும், கட்சித் தொண்டா்களையும் சிறப்பான முறையில் வழிநடத்த வேண்டும், மீண்டும் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என்ற எண்ணத்தோடு என்னுடைய ஆன்மிகப் பயணத்தை மேற்கொண்டுள்ளேன் என்றாா் அவா்.