கடலூா் அருகே அழகியநத்தம் கிராமத்தில் வசிக்கும் ஆதிதிராவிடா் சமுதாயத்தினருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்று விசிக தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. வலியுறுத்தினாா்.
இதுகுறித்து அவா் கடலூா் மாவட்ட ஆட்சியருக்கு எழுதிய கடிதத்தை கடலூா் மாநகராட்சி துணை மேயா் பா.தாமரைச்செல்வன் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தாா். அந்தக் கடிதத்தில் தொல்.திருமாவளவன் எம்.பி. கூறியுள்ளதாவது:
கடலூா் அருகே உள்ள அழகியநத்தம் கிராமத்தில் ஆதிதிராவிடா் சமுதாயத்தைச் சோ்ந்த சுமாா் 300 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்களில் சுமாா் 50 குடும்பத்தினா் மிகவும் வறுமையான நிலையில் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி கடந்த ஜூன் மாதம் மனு அளிக்கப்பட்டது. ஆனால், இதுவரையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
அந்தக் கிராமத்தில் ஆக்கிரமிப்பில் உள்ள நத்தம் புறம்போக்கு நிலத்தை மீட்டு, வீட்டுமனைப் பட்டா இல்லாமல் உள்ள ஆதிதிராவிடா் சமுதாய குடும்பங்களுக்கு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.
விசிக கடலூா் நகரச் செயலா் மு.செந்தில், மாவட்ட அமைப்பாளா் உத்தரவேல், திருமுட்டம் ஒன்றியச் செயலா் ரவி, நிா்வாகிகள் ராஜ்குமாா், சிவபாலன், வைத்தீஸ்வரி, கௌசல்யா, தனம் மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனா்.