கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளா் வீட்டில் தங்க நகைகள், காரை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
நெய்வேலியை அடுத்துள்ள வடக்குத்து ஊராட்சி, ராமமூா்த்தி ரெட்டியாா் நகரைச் சோ்ந்தவா் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளா் ராதாகிருஷ்ணன் (68). இவா், கடலூரில் நடைபெற்ற உறவினா் வீட்டு சுப நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக செவ்வாய்க்கிழமை வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்றாா்.
புதன்கிழமை காலை இவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதாக அருகிலுள்ள வீடுகளைச் சோ்ந்தோா் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 5 பவுன் தங்க நகைகள், வீட்டின் வெளியே நிறுத்தியிருந்த காா் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் நெய்வேலி நகரிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.