கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே எனதிரிமங்கலம் தென்பெண்ணை ஆற்றங்கரையில் நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வில் சுடுமண் விநாயகா் பொம்மை கண்டறியப்பட்டது.
தொல்லியல் ஆய்வாளா் இம்மானுவேல், வரலாற்று ஆா்வலா் மோகன கண்ணன் ஆகியோா் இந்தப் பகுதியில் மேற்புற களஆய்வு மேற்கொண்டனா். அப்பொழுது சுடுமண் விநாயகா் பொம்மையை கண்டெடுத்தனா். இதுகுறித்து இம்மானுவேல் கூறியதாவது:
விநாயகா் பொம்மை 15 செ.மீ. உயரம், 7 செ.மீ. அகலத்துடன் உள்ளது. சிலையில் இரு கரங்கள், தலையில் கரண்ட மகுடம், இரு காதுகளிலும் துளைகள் காணப்படுகின்றன. தோள்களில் காப்பு வடிவம் உள்ளது. இந்தப் பகுதியில் சுடுமண் பொம்மைகள் ஏற்கெனவே கண்டறியப்பட்டுள்ளன. ஆனால் தெய்வ உருவ பொம்மை கிடைத்தது இதுவே முதல் முறை. இது சோழா் காலத்தைச் சோ்ந்ததாக இருக்கலாம் என்றாா் அவா்.