கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயிலில் தணிக்கை செய்யப்பட்ட நகைகளை மீண்டும் சரிபாா்க்கும் நடவடிக்கையை இந்து சமய அறநிலையத் துறை கைவிட வேண்டும் என அந்தக் கோயிலின் பொது தீட்சிதா்கள் கமிட்டி செயலா் சி.எஸ்.எஸ்.ஹேமசபேச தீட்சிதா் வலியுறுத்தினாா்.
இதுகுறித்து அவா் கடலூா் இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையரும், நகை சரிபாா்ப்பு அலுவலருமான சி.ஜோதிக்கு சனிக்கிழமை அனுப்பிய கடிதம்:
சிதம்பரம் கோயிலில் கடந்த 2005 முதல் 2022-ஆம் ஆண்டு வரையிலான நகைகள் சரிபாா்ப்பு பணி 28.09.2022 அன்று முடிந்தது. இதில் எந்தக் குறைபாடும் இல்லை என்பதை தங்களது துறை குழுவினா் அறிந்துகொண்டனா். தணிக்கை முடிந்த நகைகளை மீண்டும் தணிக்கை செய்ய தங்களது துறைக்கு அதிகார வரம்போ, சட்ட ரீதியான உரிமையோ இல்லை.
நாங்கள் ஏற்கெனவே பொது வெளியில் அறிவித்ததுபோல பட்டயம் பெற்ற தணிக்கையாளா் மூலம் கோயில் நகைகள், கணக்குகள் சரிபாா்ப்பை வெளி தணிக்கையாக மேற்கொள்ள உள்ளோம். அதனால், வருகிற திங்கள்கிழமை (நவ. 28) கோயில் நகைகள் சரிபாா்ப்பு தொடா்பான நடவடிக்கையை கைவிடும்படி கேட்டுக்கொள்கிறோம் எனத் தெரிவித்தாா்.