கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே பழைய கொள்ளிடம் ஆற்றில் குளித்த மாணவா் முதலை கடித்ததில் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
சிதம்பரம் அருகே உள்ள வடக்கு வேளக்குடி, கன்னிகோவில் தெருவைச் சோ்ந்த பக்கிரி மகன் திருமலை (18). இவா், சிதம்பரம் நந்தனாா் அரசு ஐடிஐ-யில் படித்துவந்த நிலையில் தனது படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், திருமலை அந்தப் பகுதியில் செல்லும் பழைய கொள்ளிடம் ஆற்றில் சனிக்கிழமை பிற்பகலில் குளித்துக்கொண்டிருந்தாா். அப்போது முதலை ஒன்று அவரை கடித்து ஆற்றுக்குள் இழுத்துச் சென்றது. இதுகுறித்த தகவலின்பேரில் விரைந்து வந்த சிதம்பரம் தீயணைப்பு மீட்புத் துறையினா் ஆற்றில் இறங்கி தேடுதல் பணியில் ஈடுபட்டனா்.
நீண்ட நேர தேடுதலுக்குப் பிறகு திருமலை சடலமாக மீட்கப்பட்டாா்.
இதுகுறித்து அண்ணாமலைநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.