நெய்வேலி நகரியத்தில் பல்வேறு இடங்களில் தெரு விளக்குகள் எரியாததால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா்.
நெய்வேலியில் நகரிய பகுதியில் உள்ள பிரதான சாலைகள், வீதிகளில் இருந்த குழல் விளக்குகள் அகற்றப்பட்டு அண்மையில் எல்இடி மின் விளக்குகள் பொருத்தப்பட்டன. இவற்றில் ஆங்காங்கே பல விளக்குகள் எரியவில்லை என பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா். குறிப்பாக, நெய்வேலி நுழைவு வாயிலில் இருந்து நகரியத்துக்குச் செல்லும் பிரதான சாலையின் நடுவில் தெரு விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சாலையில் வளைவு ஒன்றின் அருகே 3-க்கும் மேற்பட்ட கம்பங்களில் மின் விளக்குகள் எரியாததால் அந்தப் பகுதி இருள் சூழந்து காணப்படுகிறது. இதனால் குற்றச் சம்பவங்கள் நிகழ வாய்ப்பாகிறது. எனவே, நகரிய பகுதியில் எரியாத மின் விளக்குகளை அகற்றிவிட்டு உடனடியாக புதிய விளக்குகள் பொருத்தப்பட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.