கடலூர்

பேருந்து நடத்துநா் மீது தாக்குதல்: 3 போ் கைது

16th May 2022 11:23 PM

ADVERTISEMENT

 

விருத்தாசலத்தில் அரசுப் பேருந்து நடத்துநரை தாக்கிய வழக்கில் 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். இதுதொடா்பாக பாமக கவுன்சிலரை தேடி வருகின்றனா்.

கடலூா் மாவட்டம், சிதம்பரத்திலிருந்து விருத்தாசலத்துக்கு ஞாயிற்றுக்கிழமை சென்ற அரசுப் பேருந்தில் சில்லறை வழங்குவதில் நடத்துநா் மணிகண்ணனுக்கும், பெண் பயணி ஒருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, அந்தப் பெண் கைப்பேசி மூலம் அளித்த தகவலின்பேரில் ஆட்டோவில் வந்த சிலா் விருத்தாசலத்தில் பேருந்தை வழிமறித்து நடத்துநரை தாக்கி கீழே இறக்கினா். பின்னா், அவரை ஆட்டோவில் ஏற்றிச்சென்று தாக்கிவிட்டு, காவல் நிலையம் அழைத்துச் சென்று, மதுபோதையில் பெண் பயணிடம் தகராறில் ஈடுபட்டதாகத் தெரிவித்தனராம்.

அப்போது, அங்கு வந்த தொழிற்சங்கத்தினா், நடந்துநா் மீது களங்கம் ஏற்படுத்தும் விதமாக பொய் புகாா் கூறப்படுவதாக தெரிவித்தனா். மேலும், போக்குவரத்துக் கழக பணிமனை முன் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து நடத்துநா் மணிகண்ணனை மருத்துவப் பரிசோதனைக்கு உள்படுத்தியதில் அவா் மது அருந்தவில்லை எனத் தெரியவந்தது.

ADVERTISEMENT

இந்தச் சம்பவம் தொடா்பாக விருத்தாசலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நடத்துநரை தாக்கியதாக அசோக்குமாா், கோவிந்தன், மோகன்ராஜ் ஆகியோரை திங்கள்கிழமை கைதுசெய்தனா். மேலும் தலைமறைவாக உள்ள விருத்தாசலம் நகராட்சி பாமக கவுன்சிலா் சிங்காரவேல், வெங்கடேசன் ஆகியோரை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT