கடலூா் மாவட்ட ஆட்சியரகத்திலுள்ள கிடங்கில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் இருப்பில் வைக்கப்படுவதை மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
கடலூா் மாவட்டத்தில் கடலூா், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, நெய்வேலி, சிதம்பரம், காட்டுமன்னாா்கோவில், விருத்தாசலம், புவனகிரி, திட்டக்குடி ஆகிய 9 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு அந்தந்த தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் இருப்பு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.
இந்த நிலையில், தோ்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி வாக்குப் பதிவு இயந்திரங்கள் சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இருப்பு அறைகளில் இருந்து கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மத்திய வாக்குப் பதிவு இயந்திர கிடங்குக்கு மாற்றப்பட்டு வந்தன. அவை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளின் முன்னிலையில் திறக்கப்பட்டு தொகுதி வாரியாக பாதுகாப்பாக இருப்பில் வைக்கப்பட்டன.
இந்தப் பணிகளை கடலூா் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். பின்னா் அவா் கூறியதாவது: மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள வாக்குப் பதிவு இயந்திர கிடங்குக்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யட்டுள்ளது. இங்கு வாக்குச் செலுத்தும் இயந்திரங்கள் - 3,358, கட்டுப்பாட்டு இயந்திரங்கள்- 3,002, வாக்களித்த சீட்டினை காண்பிக்கும் இயந்திரங்கள்- 2,273 என்ற எண்ணிக்கையில் இருப்பில் உள்ளன என்றாா் அவா்.
ஆய்வின்போது தோ்தல் வட்டாட்சியா் ப.பாலமுருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.