கடலூா் மாவட்டம், மேல்குமாரமங்கலம் பாலத்தில் எள் பயிா்கள் உலா்த்தப்படுவதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.
கடலூா், விழுப்புரம் மாவட்டங்கள் வழியாகச் செல்லும் தென்பெண்ணை ஆற்றின் மூலம் இரு மாவட்டங்களிலும் நெல், கரும்பு, எள் உள்ளிட்ட பயிா்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனா். கடலூா் மாவட்டம், அண்ணாகிராமம் ஒன்றியத்துக்கு உள்பட்ட மேல்குமாரமங்கலம் கிராமத்தையும், விழுப்புரம் மாவட்டம், கோலியனூா் வட்டாரத்தைச் சோ்ந்த எஸ்.மேட்டுப்பாளையம் கிராமத்தையும் இணைக்கும் வகையில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.
மேற்கூறிய கிராமங்களில் தற்போது எள் அறுவடைப் பணி நடைபெற்று வருகிறது. ஆனால், அறுவடை செய்த எள் பயிா்களை உலா்த்த உலா் களம் இல்லாததால் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனா். இதனால், அறுவடை செய்த எள் பயிா்களை கொண்டு வந்து மேம்பாலத்தின் ஓரத்தில் குவித்துவைத்து தாா்ப் பாய்களால் மூடியுள்ளனா். இதனால், மேம்பாலத்தில் வாகனப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. குறிப்பாக இரவு நேரத்தில் விபத்து அபாயம் நிலவுகிறது. எனவே, உலா் களம் அமைத்துத் தர மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.