பண்ருட்டியில் பெண் சந்தேக மரணம் தொடா்பாக கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து பண்ருட்டி, மேலப்பாளையம் பகுதியைச் சோ்ந்த வரதன் மனைவி கல்பனா என்பவா் கடலூா் மாநகராட்சி துணை மேயா் பா.தாமரைச்செல்வனுடன் புதன்கிழமை அளித்த புகாா் மனு:
எனது மகள் பொறியியல் பட்டதாரியான ரஞ்சனியும், அங்குசெட்டிப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த அன்புக்கரசு மகன் வெங்கடேசனும் காதலித்து கடந்த 19. 8.2020 அன்று திருமணம் செய்துகொண்டனா். பண்ருட்டி, திருவதிகையில் தனியாக வசித்து வந்தனா். ஆனால், இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டது.
இந்த நிலையில், கடந்த மாதம் 13-ஆம் தேதி எனது மகள் மின்விசிறியில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா். இதுகுறித்து பண்ருட்டி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. எனது மகள் சாதிய ஆணவக் கொலை செய்யப்பட்டதாகக் கருதுகிறோம். எனவே இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும். சம்பவத்தில் தொடா்புடையோரை கைது செய்ய வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டது.