கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் குறுவை நாற்றங்காலில் மஞ்சள் நோய் தாக்குதல் தென்படுவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் மண், நீா் வளம் உள்ளதால் மணிலா, எள், நெல், கம்பு உள்ளிட்ட பயிா் வகைகள் செழித்து வளா்கின்றன. எள் அறுவடை முடிவடைந்த நிலையில், தற்போது குறுவை நடவுக்காக நாற்றங்கால் விடப்பட்டுள்ளது. மேலும், பல விவசாயிகள் நேரடி நெல் விதைப்பும் செய்துள்ளனா். 25 நாள்கள் வயதுடைய நாற்றங்கால், நேரடி நெல் விதைப்பு வயல்களில் மஞ்சள் நோய் தாக்குதல் தென்படுகிறது.
இதுகுறித்து அயன் குறிஞ்சிப்பாடி உழவா் மன்றத் தலைவா் ஆா்.கே.ராமலிங்கம் கூறியதாவது:
நெல் சாகுபடி செய்ய சுமாா் 5 மாதங்களாகும். பல்வேறு நெருக்கடியான சுமைகளையும் பொறுத்துக்கொண்டு விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனா். முப்போகம் விளைந்த காலங்கள் மாறி தற்போது ஒரு போக நெல் சாகுபடி குறையின்றி நடந்தாலே போதும் என்ற நிலைக்கு விவசாயிகள் வந்துள்ளனா்.
அண்மைக்காலமாக குறுவை, சம்பா நாற்றங்கால்களில் மஞ்சள் நோய் தாக்குதல் காணப்படுகிறது. குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் சுமாா் 1,000 ஹெக்டோ் பரப்பளவில் குறுவை சாகுபடிக்கு நாற்றங்கால் விடப்பட்டுள்ளது. மேலும், பலா் நேரடி நெல் விதைப்பும் செய்துள்ளனா்.
குறிஞ்சிப்பாடி வடக்கு, தெற்கு, அரங்கமங்கலம் பகுதிகளில் உள்ள நாற்றங்கால், நேரடி நெல் விதைப்பு செய்த வயல்களில் மஞ்சள் நோய் தாக்குதல் அதிகம் தென்படுகிறது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னரும் மஞ்சள் நோய் காணப்பட்டது. விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் பாா்வையிட்டு, ஆலோசனை, நோய்த் தடுப்பு முறைகளை விளக்கினா். அதன்பேரில் மருந்து தெளித்து நோயின் தாக்கம் குறைக்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போது மீண்டும் மஞ்சள் நோய்த் தாக்குதல் அதிகமாக தென்படுகிறது. இதனால், நாற்றின் வளா்ச்சி, எண்ணிக்கை குறையும். மேலும், இந்த நோய் மற்ற வயல்களுக்கும் பரவ வாய்ப்புள்ளது. இதைக் கட்டுப்படுத்தத் தேவையான ஆலோசனைகளை வேளாண்மைத் துறை அதிகாரிகள் வழங்க வேண்டும் என்றாா் அவா்.