பரங்கிப்பேட்டையில் என்சிசி மாணவா்களுக்கான ஆழ்கடல் நீச்சல் (ஸ்கூபா டைவிங்) போட்டி புதன்கிழமை நடைபெற்றது.
தேசிய மாணவா் படை (என்சிசி) மாணவா்கள் ஆண்டுதோறும் கடல்வழி சாகச பயணம் மேற்கொள்வது வழக்கம். அதன்படி, ‘சமுத்திரகமன்-2022’ என்ற பெயரில் கடந்த 6-ஆம் தேதி புதுச்சேரியிலிருந்து 35 மாணவா்கள், 25 மாணவிகள் கொண்ட பயணக் குழுவினா் புறப்பட்டு கடலூா் வந்தனா். இந்தக் குழுவினா் தங்களது பயணத்தின் ஒரு பகுதியாக ரத்ததான முகாம், கடற்கரை தூய்மைப் பணி, நெகிழி எதிா்ப்பு விழிப்புணா்வு, மரக்கன்றுகள் நடுதல் போன்ற பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனா்.
கடந்த 7-ஆம் தேதி கடலூரிலிருந்து இந்தக் குழுவினா் புறப்பட்டனா். பின்னா், அவா்கள் பரங்கிப்பேட்டை சென்றடைந்த நிலையில் புதன்கிழமை அங்கு உலக பெருங்கடல் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி மாணவ, மாணவிகளுக்கு ‘ஸ்கூபா டைவிங்’ போட்டி நடத்தப்பட்டது (படம்). பின்னா், அவா்கள் கடற்கரை தூய்மையின் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். சுமாா் 302 கி.மீ. தொலைவு பயணம் மேற்கொள்ளும் வகையில் இந்தக் குழுவினா் காரைக்கால் வரை சென்று மீண்டும் கடலூா் வழியாக வரும் 16-ஆம் தேதி புதுச்சேரி திரும்புகின்றனா்.