கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே பெண் முந்திரி வியாபாரியை வழிமறித்து அவரது காரை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பண்ருட்டி வட்டம், ஆத்திரிகுப்பம் கிராமத்தைச் சோ்ந்த ராமசாமி மனைவி மணிமேகலை (50). முந்திரி வியாபாரி. இவருக்கும், கீழ்காங்கேயன்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் அசோகன் என்பவருக்கும் தொழில், பணப் பிரச்னை தொடா்பாக முன்விரோதம் உள்ளதாம்.
இந்த நிலையில், கடந்த 24-ஆம் தேதி மணிமேகலை தனது காரில் நெய்வேலிக்கு சென்றுகொண்டிருந்தாா். அப்போது, 70 கிலோ முந்திரி பருப்பை காரில் கொண்டுசென்றாா். ஆத்திரிக்குப்பம் காப்புக்காடு அருகே சென்றபோது ஆறுமுகம், அவரது மகன் அசோகன் மற்றும் சிலா் காரை வழிமறித்தனா். பின்னா், மணிமேகலையின் காா் அதிலிருந்த முந்திரி பருப்பு , கைப்பேசியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனராம். இதுகுறித்து புகாரின்பேரில் முத்தாண்டிக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.