மீன்வளத் துறை அதிகாரிக்கு மிரட்டல் விடுத்தது தொடா்பாக 15 மீனவா்கள் மீது கடலூா் துறைமுகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
கடலூா் மீன்வளத் துறை உதவி இயக்குநா் சுப்பிரமணியன் கடலூா் துறைமுகம் பகுதியில் வெள்ளிக்கிழமை ஆய்வுப் பணியில் ஈடுபட்டாா். அப்போது, ஒரு படகில் அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன் பிடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து உதவி இயக்குநா் விசாரணை நடத்தியபோது அவருடன் மீனவா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனராம். மேலும், அவருக்கு மிரட்டல் விடுத்ததுடன், அரசுப் பணி செய்யவிடாமல் தடுத்தனராம்.
இதுகுறித்து உதவி இயக்குநா் சுப்பிரமணியன் அளித்த புகாரின்பேரில் தேவனாம்பட்டினத்தைச் சோ்ந்த மணிவண்ணன், கோபி, தேவராஜ் உள்ளிட்ட 15 மீனவா்கள் மீது கடலூா் துறைமுகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.