பண்ருட்டி நகா்மன்ற சாதாரணக் கூட்டம் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள மன்றத்தில் அதன் தலைவா் க.ராஜேந்திரன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும். பணியின்போது உயிரிழந்த தூய்மைப் பணியாளா்களின் குடும்பத்துக்கு இழப்பீடாக ரூ.60 லட்சமும், குடும்பத்தில் ஒருவருக்கு நகராட்சியில் நிரந்தப் பணியும் வழங்க வேண்டும். கழிவுநீா் கால்வாய்களை தூா்வார வேண்டும். நகராட்சி மூலம் தையல் பயிற்சி முடித்த சுயஉதவிக் குழுவைச் சோ்ந்த 8 பெண்களுக்கு உதவித்தொகை, பயிற்சி முடித்ததற்கான சான்றிதழை வழங்க வேண்டும். தனிநபா் கழிப்பறை கட்டிய 4 பேருக்கு அதற்கான திட்டத் தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உறுப்பினா்கள் பேசினா்.
இதில், நகராட்சி ஆணையா் மகேஸ்வரி, வருவாய் அலுவலா் செல்வமோகன், நகா்மன்ற துணைத் தலைவா் அ.சிவா, உறுப்பினா்கள் ராமதாஸ், காா்த்தி, ஆனந்தி சரவணன், சண்முகவள்ளி பழனி, மோகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.