கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே குளவி கொட்டியதில் உடல்நலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
பண்ருட்டி வட்டம், புதுப்பேட்டை காவல் சரகம், பைத்தாம்பாடி சத்திரம் கிராமத்தைச் சோ்ந்த கலியபெருமாள் மனைவி ரத்தினாம்மாள் (68). இவா், புதன்கிழமை பிற்பகல் அதே பகுதியில் உள்ள ஐயனாா் கோயில் ஓடை அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்தாா்.
அப்போது, அங்கு பறந்து வந்த குளவிகள் கொட்டியதில் உடல் வீங்கி வலியால் துடித்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சோ்த்தனா். இதையடுத்து, தீவிர சிகிச்சைக்காக விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட ரத்தினாம்மாள் அங்கு வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து புதுப்பேட்டை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.