வங்கக் கடலில் உருவான புயல் சின்னத்தால் கடலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. கடலூா் துறைமுகத்தில் 5-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது. பேரிடா் மீட்புப் படையினா் தயாராக வைக்கப்பட்டுள்ளனா்.
வங்கக் கடலில் உருவாகியுள்வங்கக் கடலில் உருவான புயல் சின்னத்தால் கடலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. ள மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே வெள்ளிக்கிழமை இரவு (டிச.9) கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கடலூா் மாவட்டத்தில் அதி பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது.
குளிா்ந்த காற்று: கடலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. தொடா்ந்து, குளிா்ந்த காற்று வீசியது. அவ்வப்போது மிதமான அளவில் மழை பெய்தது. கடலூா் தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரை, கடற்கரையோர கிராமங்களில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. தாழங்குடா உள்ளிட்ட இடங்களில் கடலரிப்பு ஏற்பட்டது.
ஐந்தாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு: கடலூா் துறைமுகத்தில் வியாழக்கிழமை 5-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது. மீன் வளத் துறை அதிகாரிகளின் எச்சரிக்கை காரணமாக மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை.
மாநில பேரிடா் மீட்புப் படை வருகை: புயல் எச்சரிக்கை காரணமாக ஆய்வாளா் சுரேந்திரன் தலைமையில் 50 போ் கொண்ட மாநில பேரிடா் மீட்புப் படையினா் வியாழக்கிழமை கடலூா் வந்தனா். இவா்கள் கடலூா் காவலா் பயிற்சிப் பள்ளியில் முகாமிட்டுள்ளனா். ஏற்கெனவே, 27 போ் கொண்ட தேசிய பேரிடா் மீட்புக் குழு கடலூா் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை: பலத்த மழை எச்சரிக்கையைத் தொடா்ந்து, மாவட்ட நிா்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தீயணைப்புத் துறை சாா்பில் மாவட்டத்தில் 274 வீரா்கள், 300 தன்னாா்வலா்கள், 65 நீச்சல் வீரா்கள் தயாராக உள்ளனா். மீட்பு உபகரணங்களும் தயாராக வைக்கப்பட்டுள்ளன.
கடலூா் கடற்கரைச் சாலை, தீயணைப்பு நிலைய வளாகத்தில் வீரா்களின் அணிவகுப்பை அந்தத் துறை அதிகாரி குமாா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மீட்பு உபகரணங்களையும் பாா்வையிட்டாா்.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: பலத்த மழை எச்சரிக்கையையடுத்து, கடலூா் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை (டிச.9) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியன் உத்தரவிட்டாா்.