இடைநிலை ஆசிரியா்களிடையே ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் என்று தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி வலியுறுத்தியது.
இந்த அமைப்பின் குறிஞ்சிப்பாடி வட்டாரக் கிளை செயற்குழுக் கூட்டம் வடலூா் அரசு மகளிா் பள்ளி வளாகத்தில் வடலூா் கல்வி மாவட்ட தலைவா் கனகராசு தலைமையில் அண்மையில் நடைபெற்றது. கடலூா் மாவட்ட மகளிரணிச் செயலா் செல்வி, வடலூா் கல்வி மாவட்டச் செயலா் அமுதா ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டாரப் பொருளாளா் சரவணன் வரவேற்றாா். செயலா் வசந்தி பேசினாா்.
கூட்டத்தில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், இடைநிலை ஆசிரியா்களிடையே ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும், வட்டாரக் கல்வி அலுவலா்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.