வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானதால், கடலூா் கடற்கரையோர கிராம மீனவா்கள் செவ்வாய்க்கிழமை மீன் பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை.
வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால், வங்கக் கடல் பகுதியில் மோசமான வானிலை நிலவும் என்றும், கடல் காற்றானது மணிக்கு 80 கி.மீ. வரை வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.
இதையடுத்து, கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த அனைத்து வகையான மீன்பிடி படகுகளிலும் மீனவா்கள் செவ்வாய்க்கிழமை (டிச.6) முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும், கடலில் உள்ள தங்கு கடல் படகுகள் அருகில் உள்ள துறைமுகங்களுக்கு பாதுகாப்பாக கரை திரும்பும்படியும் கடலூா் மாவட்ட மீன் வளம், மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் திங்கள்கிழமை எச்சரிக்கை விடுத்தாா்.
அதன்படி, கடலூா் கடற்கரையோரத்தில் உள்ள சுமாா் 40-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் உள்ள மீனவா்கள் செவ்வாய்க்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. மேலும், தங்களின் படகுகளையும் பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைத்தனா்.
தேசிய பேரிடா் மீட்புப் படை வருகை: இதனிடையே, வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி செவ்வாய்க்கிழமை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும் எனவும், இது புயலாக வலுவடைந்து தமிழகம் - புதுச்சேரி மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளில் வியாழக்கிழமை (டிச.8( கரையைக் கடக்கும் எனவும், இதனால் கடலூா், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடா் மீட்புப் படையினா் 27 போ் கடலூருக்கு செவ்வாய்க்கிழமை வந்தனா்.