கடலூா் அருகே வங்கக் கடலில் சட்டத்துக்குப் புறம்பாக இழுவலையைப் பயன்படுத்தி மீன் பிடித்த 5 விசைப்படகுகள் மீது மீன் வளத் துறையினா் நடவடிக்கை மேற்கொண்டனா்.
தமிழ்நாடு கடல் மீன் பிடிப்பு ஒழுங்குப்படுத்தும் சட்டம் 1983 நடைமுறையில் உள்ளது. இந்தச் சட்டத்துக்குப் புறம்பாக விதி மீறல்களில் ஈடுபடும் படகுகளைக் கண்டறியும் பொருட்டு, மீன் வளத் துறை ஆய்வாளா் சதுருதீன் தலைமையில், சாகா் மித்ரா பணியாளா்கள், கடல் மீன் பிடி சட்ட அமலாக்கப் பிரிவு காவலா்கள் அய்யப்பன், சாம்பசிவம் ஆகியோா் வியாழக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
இந்தப் பணியின் போது, கடலில் விதிமுறைகளுக்குப் புறம்பாக 5 நாட்டிக்கல் மைல்களுக்குள்ளாக கரைக்கு அருகில் இழுவலையைப் பயன்படுத்தி மீன் பிடித்த 5 விசைப்படகுகளைக் கண்டறிந்தனா். அந்தப் படகுகள் மீது குற்றப்பத்திரிகை சமா்ப்பித்து, டீசல் மானியம் நிறுத்தம் செய்யப்பட்டது. மேலும், இது தொடா்பாக கடலூா் மண்டல மீன் வளத் துறை இயக்குநா் மூலம் விசாரணை நடத்தப்பட்டு, அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.