கடலூா் அருகே நெடுஞ்சாலை விரிவாக்கப் பணியால் பாதிக்கப்படும் 44 குடும்பத்தினருக்கு மாற்று இடம் வழங்க வலியுறுத்தி புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கடலூா் அருகே பெரியகங்கணாங்குப்பம் முதல் மஞ்சக்குப்பம் ஆட்டோ நிறுத்தம் வரை தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணி நடைபெற உள்ளது. எனவே, சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 44 வீடுகளை சம்பந்தப்பட்டவா்கள் காலி செய்ய வேண்டும் என நெடுஞ்சாலைத் துறை சாா்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதுதொடா்பாக வட்டாட்சியா் அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
இந்த நிலையில், ஆக்கிரமிப்புக் கட்டடங்கள் அகற்றத்தால் பாதிக்கப்படும் 44 குடும்பத்தினா் தங்களுக்கு அருகே மாற்று குடியிருப்பு இடம், உரிய இழப்பீடு வழங்க வேண்டும், அரசு சாா்பில் அதற்கான உத்தரவாதக் கடிதம் அளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி கடலூா் தலைமை தபால் நிலையம் அருகே புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
ஆா்ப்பாட்டத்துக்கு வீடற்றோா் நீதிக்கான கூட்டியக்க பகுதி ஒருங்கிணைப்பாளா் பாபு தலைமை வகித்தாா். ராஜேந்திரன், ராமலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். காா்த்திகேயன் வரவேற்றாா். கடலூா் மாநகராட்சி துணை மேயா் பா.தாமரைச்செல்வன் தொடக்க உரை ஆற்றினாா். விசிக மாநில அமைப்புச் செயலா் திருமாா்பன், காங்கிரஸ் மாநிலச் செயலா் சந்திரசேகா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் கோ.மாதவன் ஆகியோா் பங்கேற்று போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துப் பேசினா்.