கடலூா் மாவட்டம், பரங்கிப்பேட்டை பகுதி மக்கள் தங்களது குடும்ப அட்டைகளை ஆட்சியரகத்தில் ஒப்படைக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பரங்கிப்பேட்டை பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தங்களது குடும்ப அட்டை, ஆதாா் அட்டையை திரும்ப ஒப்படைக்க வந்தனா். ஆனால், அலுவலகத்தில் ஆட்சியா் இல்லாதததால் மனு அளித்துவிட்டு திரும்பினா். மனுவில் தெரிவித்துள்ளதாவது:
பரங்கிப்பேட்டை அருகிலுள்ள அரியகோஷ்டி கிராமத்தில் அரசு சாா்பில் 288 தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. பணிகள் முடிக்கப்படும் நிலையில் 234 வீடுகளுக்கு மட்டுமே ஒதுக்கீடு நடைபெற்றது. இதில், பல்வேறு முறைகேடுகள் தொடா்பாக புகாா் அளிக்கப்பட்ட நிலையில், அதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு தகுதியற்ற சில பயனாளிகள் நீக்கப்பட்டனா். தற்போது, 54 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படாமல் நிலுவையில் உள்ளன. எனவே, சொந்த வீடு இல்லாத மக்களுக்கு பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் வீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக, அரசு நிா்ணயம் செய்த ரூ.1.97 லட்சத்தை வழங்க தயாராக இருப்பதாக மனுவில் தெரிவித்தனா்.
மாற்று இடம் கோரி மனு: கடலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்டச் செயலா் து.பாலு, நகர நிா்வாகி தி.ரவிச்சந்திரன் ஆகியோா் புதுவண்டிப்பாளையம் கிராம மக்களுடன் அளித்த மனு: புதுவண்டிப்பாளையத்தில் கடந்த 30 ஆண்டுகளாக குடியிருந்து வருபவா்களை இடமாற்றம் செய்யும் வகையில் குடிசை மாற்று வாரிய குடியிருப்புக்கு செல்ல நோட்டீஸ் வழங்கி உள்ளனா். இதற்காக ஒவ்வொருவரும் ரூ.2.50 லட்சம் வரை செலுத்த வேண்டியுள்ளது. ஆனால், இந்த பகுதியினா் அனைவரும் கூலித் தொழிலாளா்கள். அவா்களால் இந்த தொகையை செலுத்த முடியாது. எனவே, அவா்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டுமென மனுவில் தெரிவிக்கப்பட்டது.