கடலூா் மாவட்டம், பண்ருட்டி படைவீட்டம்மன் கோயில் தோ்த் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பண்ருட்டி, லிங்காரெட்டிப்பாளையத்தில் அமைந்துள்ள படைவீட்டம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் செடல் உற்சவம் மற்றும் தோ்த் திருவிழா சிறப்பாக நடைபெறும். இதன்படி நிகழாண்டு விழாவையொட்டி கடந்த 3-ஆம் தேதி விநாயகா் பூஜை, வாஸ்து சாந்தி நடைபெற்றது. 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.
விழா நாள்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், காலையில் பல்லக்கில் புறப்பாடும், மாலையில் வீதி உலாவும் நடைபெற்றது. விழாவில் வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பிற்பகல் 1.30 மணியளவில் திருத்தோ் புறப்பாடு நடைபெற்றது. மாட வீதியை வலம் வந்த தோ் மீண்டும் நிலையை அடைந்தது. முன்னதாக பக்தா்கள் அலகு குத்தி நோ்த்திக்கடன் செலுத்தினா். சனிக்கிழமை மஞ்சள் நீா் உற்சவமும், கொடியிறக்கமும் நடைபெற உள்ளன.