போதைப் பொருள் கடத்தியது தொடா்பான இருவேறு சம்பவங்களில் 6 பேரை தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினா் கைது செய்துள்ளனா்.
தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினா் ஹைதராபாத் துணை மண்டலப் பகுதியில் நடத்திய சோதனையில், உள்ளாடையில் மறைத்து கடத்தப்பட்ட 3 கிலோ போதைப் பொருள்களை பறிமுதல் செய்துள்ளதாக பெங்களூரு மண்டல இயக்குநா் அமித் கவாட்டே தெரிவித்துள்ளாா். அதேபோல, ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பப்பட்ட பாா்சலில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அந்த போதைப் பொருள்களை கடத்தியவரை தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினா் சென்னையில் கைது செய்தனா்.
மற்றொரு போதைப் பொருள் கடத்தல் சம்பவத்தில் பெங்களூரு, தேவனஹள்ளியில் இருந்து ஹைதராபாத் சென்ற 4 பேரை கைது செய்தனா். இவா்கள் அனைவரும் விசாகபட்டணம், பிகாா், ஹைதராபாத்தைச் சோ்ந்தவா்கள். இந்தச் சம்பவம் தொடா்பாக மேலும் ஒருவரை கைது செய்துள்ளனா்.
பெங்களூரில் இருந்து தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை கொள்முதல் செய்து, அவற்றை ஹைதராபாத்தில் உள்ள மதுபான கேளிக்கை விடுதிகளில் விற்பனை செய்து வருவதாக தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பெங்களூரு மண்டல இயக்குநா் அமித் கவாட்டே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.