தமிழக மீனவா்கள் மீதான தாக்குதலைத் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பண்ருட்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் தி.வேல்முருகன் வலியுறுத்தினாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த சில நாள்களுக்கு முன்பு நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவா்கள் 23 போ் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படை, மீனவா்களின் படகுகளையும், வலைகளையும் பறிமுதல் செய்தது. மேலும், மீனவா்களையும் கைது செய்து இலங்கை சிறையில் அடைத்தது.
இதன் தொடா்ச்சியாக, வங்கக் கடலில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவா்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படை, மீனவா்களின் படகை கவிழ்த்தது. இதில் 2 மீனவா்கள் உயிா் தப்பிய நிலையில், மீனவா் ராஜ்கிரண் நீரில் மூழ்கி மயமானாா்.
மீனவா் ராஜ்கிரணை மீட்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பதுடன், பாதிக்கப்பட்ட மீனவா்களுக்கு நிதியுதவி, சேதமடைந்த படகுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
தமிழக மீனவா்கள் மீது தொடா்ந்து தாக்குதல் நடத்தி வரும் இலங்கை கடற்படை மீது வழக்குப் பதிவு செய்து, இந்தியாவில் இருக்கும் இலங்கை தூதரைக் கைது செய்ய மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.