பண்ருட்டி அருகே கோயில் இடத்தை ஆக்கிரமித்து கடை கட்ட முயன்றதை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தடுத்து நிறுத்தினா்.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், திருத்துறையூரில் பழைமை வாய்ந்த சிஷ்ட குருநாதா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் சுற்றுச் சுவரைச் சுற்றியுள்ள இடத்தை ஆக்கிரமித்து பலா் கொட்டகை அமைத்து கடை நடத்தி வருகின்றனா். இவா்களில் ஒருவா், இரும்புக் குழாய் அமைத்து கொட்டகை அமைக்கும் பணியில் ஈடுபட்டாா்.
இதையறிந்த இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவா் ஆா்.எஸ்.தேவா, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தாா். இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற அதிகாரிகள், கொட்டகை அமைக்கும் பணியைத் தடுத்து நிறுத்தினா்.
இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை அலுவலா் கூறுகையில், ‘கோயில் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அனைத்தும் ஒரு வாரத்தில் அகற்றப்படும்’ என்றாா்.