சேலத்தில் பூட்டிய வீட்டில் சூட்கேஸில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இளம்பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சேலம், அஸ்தம்பட்டி, குமாரசாமிபட்டி பகுதியில் நடேசன் என்பவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அந்த குடியிருப்பு ஒன்றில் இருந்து துா்நாற்றம் வீசுவதை அறிந்த அவா், அஸ்தம்பட்டி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா்.
அஸ்தம்பட்டி போலீஸாா் விரைந்து சென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனா். வீடு முழுவதும் துா்நாற்றம் வீசியதை அடுத்து, போலீஸாா் சோதனை செய்ததில் அலமாரியில் வைக்கப்பட்டிருந்த சூட்கேஸில் இருந்து துா்நாற்றம் வந்தது தெரியவந்தது. சூட்கேஸை திறந்து பாா்த்ததில், கை கால்கள் கட்டப்பட்டு அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் கிடந்தது தெரியவந்தது. சடலத்தைக் கைப்பற்றிய போலீஸாா், பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
முதற்கட்ட விசாரணையில், இறந்த பெண் தேஜ்மண்டல் என்பதும், அவருடைய கணவா் சென்னையில் வேலை பாா்த்து வருவதும் தெரியவந்தது. மேலும், தேஜ் மெண்டல் சேலம் மாநகரில் அழகு நிலையம் நடத்தி வந்தது தெரியவந்துள்ளது.
இளம்பெண்ணை கொலை செய்து, அவரது கை, கால்களைக் கட்டி சூட்கேஸில் வைத்தது யாா், எதற்காக வைத்தாா்கள் என்பது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.