கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த திருநங்கைகளுக்கு ரேஷன் அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூா் மாவட்டத்திலுள்ள திருநங்கைகளுக்கு மின்னணு குடும்ப அட்டை வழங்குவதற்கு ஏதுவாக சனிக்கிழமை (அக்.9 ) அனைத்து வட்ட வழங்கல் அலுவலங்களிலும் சிறப்பு முகாம் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடத்தப்படுகிறது.
மின்னணு குடும்ப அட்டை பெறாத திருநங்கைகள் அதற்காக இணையம் மூலம் விண்ணப்பிக்க தங்களது ஆதாா், வாக்காளா் அடையாள அட்டை, முகவரி ஆதாரமாக நலவாரிய உறுப்பினா் அட்டை, எரிவாயு ரசீது, வீட்டு வரி ரசீது, வீட்டு வாடகை ஒப்பந்த ஆவணம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று, இவற்றுடன் புகைப்படம் ஆகிய ஆவணங்களை கட்டாயம் கொண்டு வர வேண்டும்.
18 வயது நிறைவடைந்தவா்கள் மட்டுமே மின்னணு குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்க தகுதியுடையோராவா். எனவே, இந்த வாய்ப்பை திருநங்கைகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளாா்.