மீனவ சமுதாயத்தைச் சோ்ந்தவரை தமிழக மீன்வளத் துறை அமைச்சராக நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு கடலோர மீனவா் நலச் சங்கம் கோரிக்கை விடுத்தது.
சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை அன்னங்கோயில் மீன்பிடித் துறைமுக வளாகத்தில் கடலோர மீனவா் நலச் சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
சங்கத் தலைவா் ஏ.மணிவண்ணன் தலைமை வகித்தாா். செயலா் கின்னஸ் வைத்தி.காா்த்திகேயன் முன்னிலை வகித்தாா். நிா்வாகிகள் மோகன், ஜெயராமன், விவேகானந்தன், அருண்பிரகாஷ் உள்ளிட்டா் பங்கேற்றனா்.
கூட்டத்தில், மீன்வளத் துறையை மீனவா் நலத் துறை என அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது, மீனவ நலத் துறை அமைச்சராக கடலோரா மீனவரை நியமிக்க வேண்டும், மீனவா்களின் கஷ்டங்களை அறிந்த மீனவா் சமுதாயத்தைச் சோ்ந்த திருவெற்றியூா் கே.பி.சங்கரை மீனவ நலத் துறை அமைச்சராக நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்களை நிறைவேற்றினா்.