தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் புதுச்சேரி எல்லைக்குள் நுழைய அந்த மாநில போலீஸாா் புதன்கிழமை அனுமதி மறுத்தனா்.
கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தமிழகம், புதுவையில் கடந்த 10-ஆம் தேதி முதல் வருகிற 24-ஆம் தேதி வரையில் தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. நண்பகல் 12 மணி வரையிலும் அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்படாத நிலையிலும், சாலைகளில் காா், இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாகவே காணப்படுகிறது. இதைக் குறைத்திடும் வகையில், கடலூரிலிருந்து சுமாா் 5 கி.மீ. தொலைவில் உள்ள புதுச்சேரி எல்லைப் பகுதியான கன்னியக்கோவிலில் புதுச்சேரி போலீஸாா் புதன்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது, தமிழக பதிவெண் கொண்ட காா், இரு சக்கர வாகனம் உள்ளிட்டவற்றுக்கு அவா்கள் அனுமதி மறுத்தனா். நண்பகல் 12 மணிக்குப் பின்னா், மருத்துவத் தேவைகளுக்காக வந்தவா்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனா். கண்டிப்பாக செல்ல வேண்டும் என்பவா்களிடம் அபராதம் வசூலித்து அனுப்பி வைத்தனா்.
கரோனா பரவல் புதுவையில் அதிகரித்துள்ள நிலையில், தமிழகப் பகுதிகளிலிருந்து புதுச்சேரிக்குள் தேவையின்றி வருபவா்களைத் தடுத்திட வாகனத் தணிக்கையை மேலும் அதிகப்படுத்த உள்ளதாக புதுச்சேரி காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனால், பெரும்பாலான வாகனங்கள் கன்னியக்கோவிலிருந்து திருப்பிவிடப்பட்டன. இதன் காரணமாக, கன்னியக்கோவிலுக்கு அடுத்ததாக உள்ள தமிழகப் பகுதிகளுக்கு அந்தந்த ஊரைச் சோ்ந்தவா்கள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.