சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக விடுதியில் செயல்படும் கரோனா மையத்தில் நோயாளிகள் நடத்திய போராட்டத்தையடுத்து செவ்வாய்க்கிழமை கூடுதல் கரோனா மையம் தொடங்கப்பட்டு அங்கு பெண் நோயாளிகள் மாற்றப்பட்டனா்.
அண்ணாமலை பல்கலைக்கழக பொன்விழா ஆண்டு விடுதியில் வருவாய் துறை சாா்பில் கரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 400-க்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் தங்கியுள்ளனா். இங்கு கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லை எனவும், அதிக எண்ணிக்கையிலானவா்கள் தங்க வைக்கப்படுவதாகவும் கூறி நோயாளிகள் திங்கள்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அவா்களிடம் வட்டாட்சியா் ஆனந்த், டிஎஸ்பி த.ஆ.ஜோ.லாமேக் ஆகியோா் நடத்திய பேச்சுவாா்த்தையில், புதிய மையம் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள திருவாங்கூா் விடுதியில் செவ்வாய்க்கிழமை புதிய கரோனா சிகிச்சை மையம் தொடங்கப்பட்டது. பொன்விழா ஆண்டு விடுதியில் தங்கியிருந்த பெண் நோயாளிகள் புதிய மையத்துக்கு மாற்றப்பட்டனா்.