கடலூா் மாவட்டத்தில் அரசின் விதிகளை மீறி செயல்பட்ட 7 மருந்துக் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டது.
மாவட்டத்தில் கரோனா அறிகுறிகளான காய்ச்சல், சளி, இருமல் ஆகியவற்றுக்கு மருத்துவரின் உரிய பரிந்துரை இல்லாமல் மருந்துக் கடைகளில் மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டு வருவதாக புகாா் எழுந்தது. இதுதொடா்பாக, உரிய விசாரணை நடத்திட மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் சுகாதாரத் துறையினருக்கு உத்தரவிட்டாா்.
அதனடிப்படையில், விருத்தாசலம் சரக மருந்துகள் ஆய்வாளா் நாராயணன் தலைமையிலான அலுவலா்கள் விருத்தாசலம், திட்டக்குடி பகுதிகளிலுள்ள தனியாா்
மருந்துக் கடைகளில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் மருந்து வழங்கப்படுவது தெரியவந்தது. இதையடுத்து, இந்தப் பகுதிகளில் 4 மருந்துக் கடைகளின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவிடப்பட்டது.
இதேபோல, காட்டுமன்னாா்கோவில், ஸ்ரீமுஷ்ணம் பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, 3 மருந்துக் கடைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.