தமிழகம் முழுவதும் வன்னியா் அமைப்புகள் ஏற்படுத்திய சொத்துகள் புறக்கணிக்கப்பட்டு, செயல்பாடில்லாமல் உள்ளதாக தமிழக பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் தெரிவித்தாா்.
சிதம்பரம் பச்சையப்பன் பள்ளி தெருவில் உள்ள பாதி கட்டுமானப் பணியுடன் நின்றுபோன வன்னியா் வளா்ச்சிக் கழக விடுதிக் கட்டடத்தை பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பிற்படுத்தப்பட்டோா் நலத் துறையின் கீழ் செயல்படும் வன்னியா் பொதுச் சொத்து நல வாரியத்தின் பணிகளை ஆய்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது. சிதம்பரம் நகரில் கடந்த 1975 வரை இயங்கி வந்த வன்னியா் வளா்ச்சிக் கழக மாணவா் விடுதி செயல்படாமல் உள்ளது. இங்கு, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய புதிய கட்டுமானப் பணி முழுமைப் பெறாமல் பாதியிலேயே நின்றுவிட்டது.
இதேபோல, தமிழகம் முழுவதும் வன்னியா் அமைப்புகள் ஏற்படுத்திய சொத்துகள் புறக்கணிக்கப்பட்டு, செயல்பாடில்லாமல் உள்ளன. அவற்றைப் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என தமிழக முதல்வா் அறிவுறுத்தியுள்ளாா்.
திமுக தலைவா் கருணாநிதி முதல்வராக இருந்த போது, வன்னியா் பொது சொத்து நல வாரியத்தை அமைத்தாா். இடையில் தொய்வுற்றிருந்த பணிகளை மீண்டும் தொடங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதன் பேரில், தற்போது பணிகள் வேகமெடுத்துள்ளது என்றாா் அவா்.
ஆய்வின் போது, வன்னியா் பொது சொத்து நல வாரியத் தலைவா் டி.சந்தானம், சிதம்பரம் கோட்டாட்சியா் கே.ரவி, வட்டாட்சியா் ஆனந்தன், திமுக நகரச் செயலா் கே.ஆா்.செந்தில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.