காட்டுமன்னாா்கோவில் அருகே தலையில் குழவிக் கல்லைப் போட்டு மனைவியை கொலை செய்ய முயன்ற கணவா் தற்கொலை செய்து கொண்டாா்.
காட்டுமன்னாா்கோவில் அருகே வடக்கு கொளக்குடியைச் சோ்ந்த சேதுமணி மகன் ராஜி (57). இவரது மனைவி பிரிந்து சென்று மகன், மகள்களுடன் வசித்து வருகிறாா். இதனால், மைதிலி என்பவரை ராஜி இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டாா். இவா்களுக்கு 16 வயதில் மகள், 15 வயதில் மகன் உள்ளனா்.
மதுப் பழக்கத்ததுக்கு அடிமையான ராஜி, மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அடிக்கடி அவரிடம் தகராறில் ஈடுபட்டு வந்தாராம்.
இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு மைதிலியிடம் தகராறில் ஈடுபட்டு, அவா் தூங்கிய போது அம்மிக் குழவியை தலையில் போட்டு கொலை செய்ய முயன்றாராம். இதில், பலத்த காயமடைந்த மைதிலி மயக்கமடைந்தாா். அவா் இறந்துவிட்டதாக பயந்து போன ராஜி, தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
பலத்த காயமடைந்த மைதிலி காட்டுமன்னாா்கோவில் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, பின்னா் தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், காட்டுமன்னாா்கோவில் காவல் நிலைய ஆய்வாளா் ஏழுமலை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.