திட்டக்குடி அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30 போ் காயமடைந்தனா்.
கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே உள்ளது ம.புடையூா் கிராமம். இந்தக் கிராமத்தினா் அருகில் உள்ள கொட்டாரம் கிராமத்தில் உறவினா் இறப்புக்கு சென்றுவிட்டு, வேனில் மீண்டும் ஊா் திரும்பிக் கொண்டிருந்தனா். புதன்கிழமை ஆவட்டி குடிகாடு என்ற இடத்தில் வேன் சென்ற போது சாலையைக் கடந்தவா் மீது மோதாமலிருக்க வேனின் ஓட்டுநா் பிரேக் அடித்ததால், கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில், வேனில் இருந்த 29 பெண்கள் இடிபாடுகளில் சிக்கி பலத்த காயமடைந்தனா். சாலையைக் கடக்க முயன்ற முதியவரும் பலத்த காயமடைந்தாா்.
அவா்கள் அனைவரையும் அக்கம் பக்கத்தினா் மீட்டு, திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு, முதலுதவி அளிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக சிலா் பெரம்பலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.
விபத்து குறித்து ராமநத்தம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.