கடலூா் மாவட்டத்தில் கரோனா தடுப்பு விதிமுறைகள் மீறல் தொடா்பாக காவல் துறையினா் கடந்த 4 நாள்களில் ரூ.10.64 லட்சம் அபராதம் வசூலித்தனா்.
தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை பரவி வருவதால் 20 புதிய கட்டுப்பாடுகளை மாநில அரசு அறிவித்துள்ளது. புதிய கட்டுப்பாடுகள் கடந்த சனிக்கிழமை முதல் அமலுக்கு வந்தன.
கட்டுப்பாடுகளை மீறுவோரிடம் அபராதம் வசூலித்திட காவல் துறை, சுகாதாரத் துறை மற்றும் உள்ளாட்சித் துறையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. இதன்படி, கடலூா் மாவட்டத்தில் இந்தத் துறையினா் தனித் தனியாகவும், சில இடங்களில் இணைந்தும் வாகனத் தணிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.
காவல் துறையினா் மாவட்டத்தில் 7 கோட்டங்களுக்கு உள்பட்ட காவல்நிலையங்களில் தனியாக தணிக்கை மேற்கொண்டனா். இதில், முகக் கவசம் அணியாமல் வாகனங்களில் பயணித்த 5,733 பேரிடமிருந்து அபராதம் வசூலித்தனா். இதுதொடா்பாக தனித் தனி வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.
இதேபோல, சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத நிறுவனங்கள் தொடா்பாக 145 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டது. கடந்த 4 நாள்களில் மொத்தம் ரூ.10.64 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.