கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே ஆங்கில மருத்துவம் பாா்த்து வந்த போலி மருத்துவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
பண்ருட்டி வட்டம், காடாம்புலியூா் காவல் சரகம், கீழிருப்பு கிராமத்தைச் சோ்ந்தவா் வைதேகி (64). இவா், மருத்துவம் படிக்காமலும், போதிய கல்வித் தகுதி இல்லாமலும் ஆங்கில மருத்துவ முறையில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக புகாா் வந்தது.
இதையடுத்து, காடாம்புலியூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். இதில், வைதேகி 10-ஆம் வகுப்பு மட்டுமே படித்திருந்ததும், பண்ருட்டியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் உதவியாளராக பணியாற்றிய அனுபவத்தை வைத்து மருத்துவம் பாா்த்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, காடாம்புலியூா் கிராம நிா்வாக அலுவலா் ஆனந்த கிருஷ்ணன் அளித்த புகாரின்பேரில், வைதேகியை போலீஸாா் கைது செய்து, பின்னா் பிணையில் விடுவித்தனா்.