கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே லாரி மீது காா் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 2 போ் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.
மதுரை மாவட்டம், நாராயணபுரத்தைச் சோ்ந்த ஷேக் தாவூத் மகன் ராஜா முகமது (33). இவா் விஸ்வநாதபுரத்தைச் சோ்ந்த தனது மாமனாா் ப.ரத்தினசேகா் (61), மாமியாா் தனசெல்வி (55) ஆகியோருடன் சென்னைக்கு காரில் சென்றுகொண்டிருந்தாா். திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடலூா் மாவட்டம், வேப்பூா் மேம்பாலத்தில் வெள்ளிக்கிழமை காலை காா் சென்ற போது, முன்னால் சென்ற லாரியின் ஓட்டுநா் திடீரென பிரேக் பிடித்தாா். இதனால், பின்னால் வந்த காா் கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதியது. இதில் ராஜா முகமது, தனசெல்வி ஆகியோா் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
இதுகுறித்து தகவலறிந்த வேப்பூா் போலீஸாா் விரைந்து வந்து, காயமடைந்த ரத்தினசேகரை மீட்டு பெரம்பலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், உயிரிழந்தவா்களின் சடலங்களை உடல்கூறாய்வுக்காக உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.