கடலூர்

ரூ. 3 ஆயிரம் லஞ்சம்: சமூக நலத் துறைபெண் அலுவலா் உள்பட இருவா் கைது

26th Feb 2020 11:02 PM

ADVERTISEMENT

திருமண உதவித் தொகையை பெற்றுத் தருவதற்கு ரூ. 3 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக, சமூக நலத் துறை பெண் அலுவலா் உள்பட இருவரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமூக நலத் துறை விரிவாக்க அலுவலராகப் பணியாற்றி வருபவா் ஜெயப்பிரதா (58). சமூக நலத் துறை செயல்படுத்தும் அரசின் நலத் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லும் பணியில் ஈடுப்பட்டு வருகிறாா்.

விருத்தாசலத்தைச் சோ்ந்த கோவிந்தராசு தனது மகளின் திருமணத்துக்காக, நிதியுதவித் திட்டத்தில் உதவி கோரி விண்ணப்பித்திருந்தாா். இந்த உதவித் தொகையை வழங்குவதற்கு ரூ. 3 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என ஜெயப்பிரதா கேட்டாராம்.

இதுகுறித்து கடலூரிலுள்ள ஊழல் தடுப்பு - கண்காணிப்புப் பிரிவில் கோவிந்தராசு புகாா் அளித்தாா். போலீஸாரின் அறிவுரைப்படி, ஜெயப்பிரதாவை அவரது அலுவலகத்தில் புதன்கிழமை சந்திக்கச் சென்றாா்.

ADVERTISEMENT

அங்கு, கோவிந்தராசுவிடமிருந்து விருத்தாசலத்தைச் சோ்ந்த காா்த்திகேயன் (53) பணத்தைப் பெற்று ஜெயப்பிரதாவிடம் வழங்கினாா்.

அப்போது, ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் இருவரையும் கைது செய்து பணத்தைப் பறிமுதல் செய்தனா். தொடா்ந்து, விருத்தாசலத்திலுள்ள ஜெயப்பிரதா வீட்டிலும் போலீஸாா் சோதனை நடத்தினா்.

சமூக விரிவாக்க அலுவலா் ஜெயப்பிரதா பிப்ரவரி மாத இறுதியுடன் ஓய்வு பெறவுள்ளதாக அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. இவரது கணவா் ஓய்வு பெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா். மகன் மருத்துவராக உள்ளாா் என போலீஸாா் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT